Sunday, July 22, 2007

மழை - யாரும் ரசிக்காத நிகழ்வு

மழை - ஒரு அற்புதமான நிகழ்வு. பால்யத்தில் இருந்தே மழை ரசித்தல் பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்திருந்து இருக்கிறது. ஈரமான மழைக்காலங்களில் சின்ன சின்ன சந்தோஷங்கள், சில் குளிரும் சிலுசிலுக்கும் காற்றும் தரும் சுகம் வேறு எந்த கால நிலையிலும் வரும் என்ற நினைவில்லை எனக்கு. வருங்காலங்களில் மழை ரசித்தல் இல்லாமலேயே போய்விடும் என்ற நிலையை இன்றைய சூழ்நிலைகள் உருவாக்குகின்றன என்பது என் கருத்து.

சரியான சாக்கடை வசதிகள் இல்லாமை, தேங்கி நிற்க்கும் தண்ணீரில் உண்டாகும் கொசுக்களும், நோய்களும், சிறு தூறல் விழுந்தாலே 40 ரூபாய்க்கு 80 ரூபாய் கேட்க்கும் இரட்டை வாடகை ஆட்டோகாரர்கள், தண்ணீரில் நிற்க்கும் வாகனத்தை தள்ள கூட காசு கேட்கும் மக்கள், எல்லா ஏரிகளும் குளங்களும் வீடுகளாகிவிட்ட நிலையில் இடுப்பு அளவு தண்ணீரில் வாழும் தாழ்ந்த நில மக்கள், இத்தனை கண்டும் ஒன்றும் செய்யாத அரசாங்கம், ஏதாவது செய்ய முயற்சிப்பவர்களையும் புரிந்து கொள்ளாமல் புறம் தள்ளும் மக்கள் சமுதாயம்...

மழை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெறுக்கதக்க நிகழ்வாகி கொண்டு வருகிறது. உழவனை பற்றியும், காய்ந்து கிடக்கும் தாவரங்களை பற்றியும், வற்றி கொண்டு இருக்கும் நிலத்தடி நீர் பற்றியும், தாகத்தில் தவிக்கும் பறவைகளையும் மிருகங்களையும் பற்றி யாரும் கவலை படுவதில்லை.
எல்லாருக்கும் தங்கள் அலுவகநேரங்கள் தவறுவதிலேயே கவனம் இருக்கிறது. இயந்தரதனமான வாழ்வில் மழை ரசித்தல் முட்டாள்தனமானது என்ற கருத்து பெரும்பாலும் இருக்கிறது. வீட்டில் இருந்தாலும் தொலைகாட்சியில் மூழ்ங்கி இருக்கிறார்கள்.

யாரையும் எதுவும் சொல்ல முடியாது. இது இன்றைய வாழ்விற்க்கு நாம் கொடுக்கும் விலை. எனினும் ஒருமுறையாவது மழை ரசித்து பாருங்கள். ஏதும் விலை கிடையாது அதற்க்கு.

No comments: