Sunday, July 22, 2007

மொழி - ஒரு அடையாளம்

என் மொழி எது என்ற அடையாள குழப்பம் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எழுத்தா ஓவியமா என்ற குழப்பம் இன்னும் என்னுள் இருக்கிறது. கவிதைகளோ கட்டுரைகளோ இன்னும் எந்த ஒரு வடிவையும் கொண்டவையாக மாறவில்லை - அவை இன்னும் என் முதல்வடிவ முறையிலேதான் இருக்கின்றது. ஓவியமும் எந்த குறிப்பிட்ட முறையையும் கொண்டிருக்கவில்லை. என் ஓவியங்கள் பெரும்பாலும் என் வழிமுறையிலேயே இருந்தாலும், அவை நான் பார்த்த ஓவியங்களின் முறைகளையும், எண்ணங்களையும் அடிப்படையாக கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்ந்த வடிவங்கள் சார்ந்த ஓவியங்களை படைக்கும் அளவுக்கும் எனக்கு அது கைவரவில்லை. என் ஓவியங்கள் விஷயம்
சொல்கிறது - ஆனால் மிக தெளிவாக சொன்னதில்லை - என் கவிதைகளை போலவே அது மிக சிலருக்கு மட்டும் அனுபவங்களால் உணரபடுகிறது.

கவிதைகளிலும் எழுத்துகளில் இதே அனுபவம் சார்த்த தாக்கம் இருக்கிறது. என்னுள் இறக்கும் அனுபவங்கள் மட்டுமே என்னில் இருந்து வெளிப்படுகின்றன. இந்த கருத்தை ஏன் என் கவிதைகள் சொல்வதில்லை, ஏன் என் ஓவியங்கள் சொல்லவில்லை என்ற கேள்விகள் என் பதில்களுக்கு அப்பாற்பட்டவை. பொதுவில் இத்தகைய பொது முறையற்ற - அல்லது என் முறைகொண்ட எழுத்துகளும் ஓவியங்களும் என் மொழியாக கொள்கிறேன். இசை என்னும் பொது மொழி எனக்கு புரிகிறது. இசையும் கவிதைகளும் ஓவியமும் கொண்ட என் மொழி - என் அனுபவ கலாச்சாரத்தில் இருந்து வெளிப்படும்போது - அதனை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறதா என தெரியவில்லை. புரியாத மொழி உதவாது என கொண்டால் - புரிந்த மொழிகள் என்ன உதவியிருக்கிறன...?

1 comment:

OCRAMA said...

How the hell is anyone suppose to read this, haha.