Sunday, August 5, 2007

உடல் இயக்கத்திற்கு நீரின் அவசியமும், தேவைகளும்

நம் உடலில் உள்ள மொத்த எடையில் 60 சதவீதத்திற்கும் அதிக அளவில் இருப்பது தண்ணீர் தான். தண்ணீர் உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பொதுவாக ஆரோக்கியமான ஒரு நபர் உணவு இல்லாமல் கூட 5 முதல் 10 நாட்கள் வரை உயிர் வாழ முடியும்.ஆனால் தண்ணீரின்றி யாராலும் உயிர் வாழ முடியாது.

15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்பட்டால அது மனிதனை மரணத்தில் கொண்டு போய் விட்டு விடும். ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவது, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு முதுமையில் நிகழ்கிறது.மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் அவசியமாகும். கோடை காலத்தில் நமது உடலுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.

No comments: