Saturday, October 25, 2008

40 ஆண்டாக பட்டாசு வெடிக்காத கிராமம்!

சிவகங்கஅருகே அரியவகை அயல்நாட்டுப் பறவைகளை பாதுகாப்பதற்காக 40 ஆண்டாக பட்டாசு வெடிக்காத அதிசய கிராமமஒன்று உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொல்லுகுடிபட்டி கிராமம் உள்ளது. இங்கு அதிகமாக அய‌ல்நாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.

இதனால், இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசு வாங்கித் தருவதில்லை. அவர்கள் தீபாவளி என்றால் பட்டாசு என்பதை மறந்து, சப்தமில்லாத தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வேட்டங்குடி ௦கிராமத்தை நோக்கிதான் முதலில் வெளிநாட்டுப் பறவைகள் வந்தன. பின்னர், கொல்லுகுடிபட்டி கண்மாய்க்கு அந்தப் பறவைகள் இடம்பெயர்ந்தன. கடந்த 1977-ல் வேட்டங்குடி பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

webdunia photoWD
ஈரான், ஈராக், ஆஸ்திரியா, ஆஸ்‌திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நத்தை கொத்தி நாரை, பாம்புதாரா, கரண்டி மூக்கன், அரிவாள்மூக்கன், ஃபிளமிங்கோ உட்பட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் இந்த கிராமத்திற்கு இனவிருத்திக்காக வருகின்றன.

கண்மாயில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சுகள் பொறித்து, இனவிருத்தி செய்கின்றன. பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

இந்த பறவைகளை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளைப் போல போற்றிப் பாதுகாக்கின்றனர். இதனால் தீபாவளி, திருவிழா உட்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பட்டாசு வெடிக்க தடை விதித்து, ஊர்க்கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்லுகுடிபட்டி ‌கிராம ம‌க்க‌‌ள் கூறுகையில், இங்கு வாழும் பறவைகளை அன்புடன் பாதுகாக்கிறோம் எ‌ன்று‌ம், சமூக விரோதிகள் பறவைகளை வேட்டையாடுவதில் இருந்து தடுக்கும் பணியிலும் தாங்கள் ஈடுபட்டுள்ளோ‌ம் என்று‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம் அவ‌ர்க‌ள் கூறுகை‌யி‌ல், ''பறவைகள் அதிகம் வந்து தங்கினால் அந்த ஆண்டு மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது உண்மை'' என்றும் தெரிவிக்கிறார்கள். பறவைகளைப் பாதுகாக்கும் கிராம மக்களுக்கு நமது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களின் செயலுக்கு ஊக்கமளிப்போம்.